Monday, 6 April 2015

Lean on Me (1989)


அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம். பேட்டர்சன் எனும் ஊரில்,
ஈஸ்ட்சைடு பள்ளி.


ஓர் வகுப்பறையில் ஆணும் பெண்ணும்- இரு மாணவர்கள் ஓடுவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர் கேள்வியைக்கேட்டதும் இருவரும் ஓட, பெண் முந்திச்சென்று  மேசைமீது இருந்த மணியை அடிக்கிறாள். பெண்கள் அணி பதில்சொல்லும் வாய்ப்பைப்பெறுகிறது. இப்படியே விளையாட்டாகவே பாடம் சார்ந்த வினாக்கள், வினாடிவினா நிகழ்வாக நடைபெறுகிறது. மாணவ,மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கு ஆர்வமூட்டியபடியே சுறுசுறுப்பாக விளையாட்டை தொடர்கிறார் ஆசிரியர். ஒரு நண்பர் வந்து அவரை அவசரமாக அழைக்கிறார்.

பள்ளி நிவாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது!

அதெப்படி? என்னை அழைக்காமல்?

கோபமுடன் கூட்டம் நடைபெறும் அறைக்குள் நுழைகிறார்.

என்னை ஏன்  அழைக்கவில்லை?

உங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.

நான் மாணவர்களின் நலனுக்காகவே பாடத்திட்டத்தை எதிர்த்து போராடுகிறேன்.

உங்களை வேறுபள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள். அதன் மூலம் இந்தப்பள்ளி சில நன்மைகளைப்பெறும்.

அனைவரையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியேறுகிறார்.

அவரே  ஜோ கிளார்க்.


இருபது ஆண்டுகள் கழித்து,


 ஈஸ்ட்சைடு பள்ளி. குப்பையும் கூளமுமாக இருக்கிறது. சுவர்கள் முழுதும் கிறுக்கல்கள். எங்கும் கூச்சல். புகை,போதைப்பழக்கத்தில் மாணவர்கள்.

ஆங்காங்கே அடிதடி. பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள் படிக்கின்றனர். வசதியில்லாத  வெள்ளையர்கள் சிலர். வெள்ளைப்பெண்கள் கறுப்பின பெண்களால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியைக்கும் அதே நிலை. மாணவர்களின் சண்டையை விலக்கச் செல்லும் ஆசிரியர் கடுமையாக தாக்கப்படுகிறார்.போதைப்பொருள் தாராளமாக விற்பனையாகிறது.

பள்ளியின் நிலை குறித்து நகர மேயர் கல்வி அதிகாரிகளுடன் விவாதிக்கிறார். நம் பள்ளி இந்த மாநிலத்திலேயே தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தா ஆண்டும் இதே நிலை தொடர்ந்தாள் பள்ளியை அரசு எடுத்துக்கொள்ளும். தேர்தல் வரப்போகும் நேரத்தில் இது எனது வெற்றியைப்பாதிக்கும் என்கிறார் மேயர்.

அடிப்படைதிறனறித்தேர்வில் குறைந்தபட்சம்   75% சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பள்ளியை அரசு எடுத்துக்கொள்ளாது. என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளியின் தற்போதைய தேர்ச்சி வீதம் 38% என்பதை அறிந்த மேயர் கவலைப்படுகிறார்.


இதை மாற்ற முடியுமா?

ஒருவரால் முடியும்.

யார்?

அதிகாரி சிரிக்க, மேயரோ,

நீங்கள் சொல்வது அவனையா?

ஆம்.

அவன் கோபக்காரனாயிற்றே?

அவரால் மட்டுமே பள்ளியை மீட்டெடுக்க முடியும்.

மேயர் சம்மதிக்கிறார்.

கல்வி அதிகாரிகள் ஜோ கிளார்க்கை காண, அவர் தற்போது பணிபுரிந்துவரும் தொடக்கப்பள்ளிக்கு செல்கின்றனர்.

தன முன்னாள் நண்பரான பள்ளி மேற்பார்வையாளரை கண்டு மகிழ்கிறார் ஜோ. அவர்கள் தேடிவந்த காரணத்தை அறிந்து கோபம் கொள்கிறார். அந்தப்பள்ளி என்னை விரட்டிய பள்ளி அங்கே ஏன் நான்செல்லவேண்டும்? என்று கேட்க, நண்பர் அவருடன் வாதிட்டு மனதை மாற்றுகிறார்.

ஜோ, ஈஸ்ட்சைடு பள்ளிக்குள் நுழைகிறார்.


பள்ளி - கூச்சலும் குழப்பமும் வன்முறையுமாக காட்சியளிக்கிறது.

ஆசிரியர்கள் கூட்டம். உதவித்தலைமையாசிரியர் வரவேற்று பிற ஆசிரியர்களை அறிமுகப்படுத்தியபடியே பள்ளி குறித்த செய்திகளை சொல்லத்தொடங்க, ஜோ இடைமறித்து,

அமருங்கள். நீங்கள் பள்ளியை நடத்துகிறீர்களா?

எனதுகூட்டத்தில் இனி யாரும் பேசக்கூடாது.

உங்கள் பென்சிலை எடுத்து எழுதத்தொடங்குங்கள்,

ஒழுங்கீனமானவர்கள், போதைப்பொருள் விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் பெயர்களை எழுதுங்கள். மதியத்திற்குள் என் மேசை மீது இந்தப்பட்டியல் இருக்கவேண்டும்.

துப்புரவுப்பணியாளர்கள் சுவர்களை சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்களின் உணவுக்கூடத்தில் இருக்கும் வலைத்தடுப்புகளை அகற்றுங்கள். மிருகக்  கூண்டுகள்  போலவே தெரிகின்றன.

நீங்கள் அவர்களை மிருகம் போல நடத்துவதாலேயே அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.

பள்ளிக்கு புதிய காவலர்கள். ஆசிரியர்களின் பொறுப்புகளில் மாற்றம்.

என கடுமையான மாற்றங்களை அறிமுகம் செய்கிறார்.

ஆசிரியரின்பணி கற்பித்தல். இத்தனை காலம் என்ன செய்தீர்கள்?

இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும். நான் சொல்வதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ஆசிரியர் கூட்டம் முடிகிறது.



பள்ளியின் கலையரங்கம். எங்கும்  கூச்சல். ஆசிரியர்கள் தங்கள் கையிலிருக்கும் பட்டியலில் உள்ள மாணவர்களை மேடைக்குச்செல்லுமாறு கூற, அவர்களும் ஆரவாரத்துடன் மேடைக்குச்செல்கின்றனர்.

மேடையில் சிலர் பாட, சிலர் புகை பிடிக்க, கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கிறது.

சிறிது நேரத்தில் ஜோ மேடை நோக்கி வருகிறார். மாணவர்களிடம் இருந்து மைக்கை வாங்கி அரங்கை அமைதிப்படுத்துகிறார்.

 பள்ளிக்குள்  புகைத்தல் தடை செய்யப்படுகிறது. நிறுத்துங்கள்.

அமைதி.அமைதி.

என் பெயர் ஜோ கிளார்க். உங்களின் புதிய தலைமையாசிரியர்.

மேடையில் மாணவர்கள் கூச்சலிடுகின்றனர்.

இப்போது மேடையிலிருக்கும் மாணவர்கள், பள்ளிப்பாடலை பாடுவார்கள்!

மேடையில் மீண்டும் கூச்சல்.

ஜோ, அரங்கில் அமர்ந்திருக்கும் மாணவர்களைப்பார்த்து,

இங்கே மேடையில் இருப்பவர்கள் கடந்த ஆண்டுகளில் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

போதைப்பொருள்களை விற்கின்றனர். பயன்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவரிடையே ஒழுங்கீனமாக நடக்கின்றனர். எனவே, இவர்கள் அனைவரையும் பள்ளியை விட்டு நீக்குகிறேன்.

மேடையில் இருந்தவர்கள் கோபமாக கூச்சலிட்டு மறுக்க, காவலர்களை அழைத்து மேடையிலிருந்த மாணவ,மாணவியரை வெளியேற்றுகிறார் ஜோ.


அரங்கம் அமைதியாக இருக்கிறது. அவர்களைப்பார்த்து,

மாணவர்களே,உங்களின் வேலை படிப்பது. தவறு செய்தால் அடுத்தது நீங்களாகவும் இருக்கலாம்.

இந்தப்பள்ளி இறந்துவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். இறந்ததிலிருந்து வெளிவரும் ஆவிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.

நீங்கள் எனது ஆவிகள். உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில்.

கல்வி கற்கவே இங்கு வந்திருக்கிறீர்கள்.

புதிய ஈஸ்ட்சைடு பள்ளிக்கு உங்களை வரவேற்கிறேன்.


பள்ளியில் பெற்றோர் கூட்டம்.


பெற்றோரிடையே கடும் விவாதம்.

ஒரு பெண் ஆவேசமாக, ஜோ மீது குற்றங்களை அடுக்குகிறார்.

என் பையன் குற்றமற்றவன். வீண்பழி சுமத்தி இவர் பலரை வெளியேற்றிவிட்டார்.

இவரால் பள்ளிக்கே அவமானம்.

சிலர் ஒத்துப்பேச,சிலர் எதிர்க்க கூச்சல் அதிகரிக்கிறது.

அனைவரையும் அமைதிப்படுத்தும் வகையில் ஜோ எழுந்து பேசத்தொடங்குகிறார்.

ஒரு அழுகிய ஆப்பிள்,கூடையில் இருக்கும் எல்லாவற்றையும் அழுகச்செய்துவிடும்.

பள்ளியில் பயிலும் 27௦௦ மாணவர்களின் நலனுக்காகவே கேவலமாக நடப்பவர்களை வெளியேற்றினேன்.

ஜோ தொடர்ந்து பேச, பெரும்பாலான பெற்றோர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.


மறுநாள் ஜோ பள்ளிக்கு வரும்போது ஒரு மாணவன் வாசலில் அமர்ந்திருக்கிறான்.

சார், நான் தவறுதலாக வெளியேற்றப்பட்டிருக்கிறேன்.

உன் பெயர்?

மாணவன் பெயரை தனது கையிலிருந்த பைலில் தேடிப்பார்க்கிறார்.

அவன் மீதுள்ள குற்றங்களை வாசிக்கிறார்.

மாணவன் மறுக்கிறான்.

கோபமாக அவனை பள்ளியின் மாடிக்கு அழைத்துச்செல்கிறார்.

இளங்காளைபருவம். தவறுகள் செய்யத்தூண்டும். நீதான் குடும்ப நிலை அறிந்து கவனமாக இருக்க வேண்டும். பள்ளியை விட்டு நீக்கப்பட்டது உன் அப்பாவுக்கு தெரியுமா?

தெரியாது.

ஏன்?

அவர் எங்களுடன் இல்லை.பிரிந்து சென்றுவிட்டார்.

எனது குற்றங்களை ஒத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

இனிமேல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.

வருந்தி அழுகிறான்.

மாடியிலிருந்து கீழே குதி. என்கிறார் ஜோ.

அவன் மறுத்து அழுகிறான்.

உன்னை அழித்துக்கொள்ள விரும்பினால் கீழே குதி. போதைப்பொருள் பயன் படுத்தினால் உன் மூளை செல்கள் அழியும். உடல் மரணத்தின் பாதையில் செல்லும்.

இனிமேல் படிப்பது மட்டுமே உன் வேலை. மீண்டும் தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவாய்.

மாணவன் மகிழ்கிறான், இனி நன்கு படிப்பதாக உறுதியளிக்கிறான்.


பள்ளியெங்கும் கையில் ஒலிபெருக்கியுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறார் ஜோ. உணவகத்தில் மாணவரிடையே நலம் விசாரித்தபடி செல்லும் ஜோ, சில மாணவர்கள் சேட்டை செய்வதை பார்க்கிறார்.

அவர்களிடம், பள்ளிப்பாடலை பாடுமாறு சொல்கிறார். பள்ளிப்பாடல் பாடும்போது யாரும் அசையக்கூடாது என்றும் கட்டளையிடுகிறார். கீழே கிடந்த காகிதக்குப்பையை எடுக்க முயன்ற கால்பந்து பயிற்சியாளரை கண்டித்து முதல்வர் அறைக்கு செல்லுமாறு கூறுகிறார். மாணவர்களுக்குப்பாடல் தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு அவர்களை வகுப்பறையிலிருந்து நீக்கி, மூன்று நாட்களுக்குப்பின் பள்ளிப்பாடலை முழுமையாக பாடிக்காட்டவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

அங்கிருந்து, இசை அறைக்குச்செல்கிறார் ஜோ.

மாணவர்கள் பாடல் பயிற்சியில் இருக்கிறார்கள்.

இசை ஆசிரியையிடம்,

பிற பாடல்களை பயிற்றுவிப்பதை நிறுத்துங்கள். அனைவருக்கும் பள்ளிப்பாடலை முதலில் கற்பித்து பாடப்பயிற்சி கொடுங்கள்.

இப்போதைக்கு முடியாது. நியூயார்க் நகரில் நடக்கவுள்ள ஒரு விழாவிற்காக மாணவர்கள் மொசார்ட்டின் இசையை பயிற்சி செய்துகொண்டுள்ளனர்.

அது பள்ளிக்கு முக்கியமில்லை.

அதுதான் முக்கியம்.ஓவ்வொரு ஆண்டும் நம் பள்ளி அந்த விழாவில் பங்குபெறுகிறது.

அப்படியா? இந்த ஆண்டு நம் பள்ளி அவ்விழாவில் பங்குபெறாது.

ஏன்?

நான் அனுமதிக்கமாட்டேன்.

இசை ஆசிரியை தொடர்ந்து மறுத்துப்பேச,

உங்களை பள்ளியில் இருந்து நீக்குகிறேன்.என்கிறார் ஜோ.

வழக்கறிஞருடன்  சந்திப்பதாக கத்திவிட்டு ஆசிரியை கோபமுடன் வெளியேறுகிறார்.


கோபமுடன் அறைக்கு வந்த ஜோ, கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் ஆங்கில ஆசிரியரை கண்டிக்கிறார்.

பள்ளிப்பாடல் பாடும்போது எக்காரணம் கொண்டும் அசைவது தவறு என்கிறார் ஜோ.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது.

அவரையும் பள்ளியை விட்டு நீக்குவதாக ஜோ, சொல்ல அவரும் கோபத்துடன் வெளியேறுகிறார்.

ஜோவின் உதவியாளர்,

முதல்வரால் ஆசிரியர்களை நீக்க முடியாது. என்று எடுத்துரைக்க,

நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன் என்கிறார் ஜோ.

ஓராண்டுக்குள் பள்ளியை மாற்றவேண்டும் என்பதால் ஆசிரியர்களிடம் கடுமையாகவே நடந்துகொள்ளும் ஜோ, மாணவர்களிடையே அன்பாகவும் பாசமாகவும் பழகுகிறார்.


உணவகத்தில் மாணவரிடையே மோதல் என்று செய்தி வருகிறது.

அவசரமாக ஓடுகிறார் ஜோ.

பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட, போதைப்பொருள் விற்பனைசெய்யும் மாணவன் ஒருவன் படித்துக்கொண்டிருக்கும் போதைப்பொருள் பயன்படுத்திய மாணவனை தாக்கிக்கொண்டிருக்கிறான். ஜோ தடுக்கிறார். அவனோ கத்தியைக்காட்டி மிரட்டுகிறான். ஜோ லாவகமாக சண்டையிட்டு அவனை மடக்கிப்பிடிக்க, மாணவனை ஜோ தாக்குவது போல ஒருவர் புகைப்படங்கள் எடுக்கிறார்.

காவலர்கள்அந்த மாணவனை இழுத்துச்செல்கிறார்கள்.

பள்ளிக்குள் இவன் எப்படி வந்தான்? என ஜோ விசாரிக்கிறார். யாரோ கதவைத்திறந்து உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். என காவலர்கள் சொல்ல, பள்ளிக்கதவுகளை எல்லாம் சங்கிலியால் பிணைத்து பூட்டுமாறு காவலர்களை பணிக்கிறார்.



Crazy Joe - மாணவனைத்தாக்கிய பள்ளி முதல்வர் என்ற தலைப்புடன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது. பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோவை அழைத்து விசாரிக்கிறார். ஜோ நடந்தவற்றை சொல்லுகிறார்.

பள்ளியில் கதவுகளை சங்கிலியால் பூட்டியிருக்கிறார்கள் என்ற செய்திபற்றி விசாரிக்க தீயணைப்பு அதிகாரி வருகிறார். அவரின் கேள்விகளுக்கு வழக்கமான துடுக்குடன் ஜோ பதிலளிக்க அவர் கோபம் கொள்கிறார். பள்ளியை பூட்டுவது தீயணைப்பு விதிகளுக்கு முரணானது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் கைது செய்வேன் என்று அந்த அதிகாரி கோபத்துடன் சொல்லிச்செல்கிறார்.

பள்ளிப்பாடல் பாடத்தெரியாமல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை கழிவறையில் பார்க்கிறார் ஜோ. பள்ளிப்பாடல் தெரியுமா?

அவர்கள் பாடுகிறார்கள்.

வழக்கமான ராகத்தில் இல்லாமல் தற்கால நடையுடன் பாடலை  வித்தியாசமாக மாணவர்கள் பாடுகிறார்கள். ஜோ ஆச்சரியப்படுகிறார்.

யார் இப்படி சொல்லித்தந்தது?

இசை அறையின் துணை ஆசிரியை.

மாணவர்களை அழைத்துக்கொண்டு இசை அறைக்கு விரைகிறார்.

துணை ஆசிரியையிடம்,

இவர்களுக்கு பள்ளிப்பாடலை வேறு ராகத்தில் கற்பித்தீர்களா?

ஆம். பழைய ராகம் நன்றாக இல்லை.எனவேதான்... என்று அவர் தயக்கத்துடன் கூற,

இவர்களுக்கு கற்றுத்தந்த பாடலை பள்ளியில் பயிலும் அனைவருக்கும் கற்றுத்தாருங்கள்! என்கிறார் ஜோ.


மகிழ்ச்சியுடன் முதல்வர் அறைக்குச்செல்கிறார். அங்கே அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. நடந்து முடிந்த இடைத்தேர்வில் மாணவர்கள் 38% தேர்ச்சியே அடைந்திருந்தனர்.

ஆசிரியர் கூட்டம். நன்கு வேலை பார்ப்பவர்கள், சரியாக வேலையில் கவனம் இல்லாதவர்களை தனியே பிரித்து நிற்கவைக்கிறார்.

இன்னும் மூன்று மாதங்களே இறுதித்தேர்வுக்கு உள்ளன.

நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள்?

உங்களில் எத்தனைபேர் உண்மையான சிரத்தையுடன் பாடத்திட்டம் தயார் செய்கிறீர்கள்?

பின்தங்கிய மாணவர்களுக்காக பள்ளி முடிந்தபின் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கின்கின்றீர்களா?

தேர்ச்சி பெறாமல் இருப்பது மாணவர்களின் குற்றமல்ல. ஆசிரியரின் குற்றம்.

 புதிய வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு பிற மாணவர்களைக்கொண்டே கற்பிக்க முயலுங்கள். விடுமுறை நாட்களில் வாசிப்பு பயிற்சி கொடுங்கள்.

நாங்கள் தயார்.மாணவர்கள் வரவேண்டுமே?

மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோரிடம் பேசுங்கள். அவர்களுக்கு வாசிக்க தெரியாவிட்டால் அவர்களையும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வரச்சொல்லுங்கள்.

ஜோவின் பேச்சால் ஆசிரியர்கள் புத்துணர்வு பெறுகின்றனர்.

பாடங்கள், விளையாட்டு முறைகளில் கற்பிக்கப்படுகின்றன.


மேயர் அலுவலகம். திருமதி. பானெட், பள்ளியிலிருந்து ஜோ நீக்கிய மாணவனின் தாய், தீயணைப்பு அதிகாரியுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜோவை பள்ளியிலிருந்து நீக்கினால் தேர்தலில் மேயரின் வெற்றிக்காக உழைப்பேன், என்னுடன் நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்கிறார் பானெட்.

தீயணைப்பு அதிகாரியும் பள்ளியை வேலை நேரத்தில் பூட்டி வைப்பது தவறு. ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அது உங்கள் வெற்றியை பாதிக்கும் என்கிறார்.

தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் அதன்பின் ஜோவின் குற்றத்தை நிரூபித்து கைது செய்யலாம் என மேயர்  திட்டமிடுகிறார்.
 இது ஜோவிற்கு தெரிய வருகிறது.

ஆசிரியர்கள் கூட்டத்தில் விவாதித்து, தீயணைப்பு அதிகாரி வரும்போது ரகசிய எண் 1௦ என்று வாக்கி டாக்கியில் சொல்வேன், சங்கிலிகளை நீக்கிவிடுங்கள். என்கிறார் ஜோ.

தீயணைப்பு அதிகாரி வரும் செய்தி கேட்டு அவசரத்தில் - கோட் 1௦- கதவுகளை பிணைத்திருக்கும் சங்கிலிகளை உடனே நீக்குங்கள் என்று அனைவருக்கும் செய்தி சொல்கிறார் ஜோ.

அதிகாரியும் திருமதி பானெட்டும் பத்திரிக்கையாளர்களுடன் பள்ளியின் உள்ளே வருகிறார்கள். ஜோவை கைது செய்வதாக தீயணைப்பு அதிகாரி சொல்கிறார்.

என்ன சாட்சி? என்று ஜோ கேட்கிறார்.

கையிலிருக்கும் ஒலிப்பதிவுக்கருவியிலிருந்து ஜோ பேசிய வார்த்தைகள் கேட்கின்றன. ஜோ அமைதியாக, பள்ளியை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர்களிடம் சொல்லியபடியே செல்கிறார்.

மேயர் அலுவகத்தில் ஜோ அடைக்கப்படுகிறார்.


திருமதி.பானெட் முயற்சியால் பள்ளி நிர்வாகக்குழு கூடுகிறது. கடுமையான குற்றச்சாட்டுகளை ஜோ மீது சுமத்தி அவரை நீக்கவேண்டும் என்று வாதிடுகிறார் பானெட்.

பெற்றோர்கள் பலவாறு விவாதிக்கிறார்கள். அப்போது வெளியே பெரும் சத்தம் கேட்கிறது.

மேயர் அலுவகத்தின் வெளியே, மாணவர்கள் அனைவரும் திரண்டு ஜோவை விடுதலை செய்யுமாறு குரல் எழுப்புகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் கலவரமாக ஆகிவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.எனவே மாணவர்களை அமைதியாக கலைந்து போகச்சொல்லுங்கள் என்று மேயர் ஜோவிடம் கேட்கிறார். ஜோவும் சம்மதிக்கிறார்.

திருமதி. பானெட், மாணவரிடையே பேசுகிறார். மாணவர்கள் அவரைக்கேலி செய்கிறார்கள்.

ஜோ, மாணவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்கிறார்.

மாணவர்கள், உங்களை விடுதலைசெய்தால் மட்டுமே செல்வோம் என்கிறார்கள்.

ஜோ அவர்களை அமைதிப்படுத்த வேண்டி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பள்ளியில் துணை முதல்வர் ஒரு கடிதம் கொண்டுவருகிறார். பள்ளித்தேர்வு முடிவுகள் அடங்கிய கடிதம் அது.

ஜோ அடஹி வாங்கி வாசித்துப்பார்த்து, பள்ளி கண்காணிப்பாளரை அழைத்து, அனைவருக்கும் கேட்கும்படி,

நடந்து முடிந்த இறுதித்தேர்வில் ஈஸ்ட்சைடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துவிட்டனர்.

மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரமிட திருமதி. பானட்டை ஒதுங்கச்சொல்லி  மேயர் பெருமிதத்துடன் கையசைக்கிறார்.

ஜோ தனது மாணவர்களுடன் செல்கிறார்.


ஜோ கிளார்க் என்ற ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து 1989 இல் எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.


ஜோ கிளார்க்காக நடித்துள்ளவர் புகழ்பெற்ற நடிகர் மார்கன் பிரீமேன். சுறுசுறுப்பு,வேகம், தலைமையாசிரியரின் கண்டிப்பு, கருணை என மார்கனின் நடிப்பை படம் முழுதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.


மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற படங்கள், மேலை நாடுகளில் எவ்வாறு ஆசிரியர்கள் சமாளிக்கிறார்கள் என்பதை  அறிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.


கல்வி முறைகள் மாறிவரும் சூழலில் ஆசிரியரின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் விவாதித்து புதிய முறைகளை பின்பற்றினால் வருங்கால தலைமுறை வளம் பெரும்.

குறிப்பாக அரசுப்பள்ளிகள் அழிவை நோக்கித்தள்ளப்படும் சூழலில் ஒரு தலைமையாசிரியர் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை Lean on me  திரைப்படம் மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.









Sunday, 5 April 2015

ஹிந்தியில் இரு படங்கள்

உலக நாடுகளில் எடுக்கப்பட்ட படங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில்
கல்வி குறித்து எடுக்கப்பட்ட படங்களை தேடிப்பார்த்தாலென்ன?
ஹிந்தியில் இரு படங்கள்.
Admissions Open மற்றும் Paathshaala.


Accepted என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல்
Admissions Open.

12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள். நல்ல கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தாரிக் என்பவர் கல்வியில் புதுமை செய்வதற்காக ஒரு கல்லூரியை தொடங்குகிறார். நாக்- அனுமதி கிடைக்கவில்லை.
12 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற அர்ஜுன், அவனது நண்பர்கள் தாரிக்கை சந்திக்கிறார்கள். 1௦௦ மாணவர்கள் சேர்ந்தால் கல்லூரியை நடத்தலாம், என்கிறார்.
அர்ஜுன் மற்றும் நண்பர்களின் முயற்சியால் மாணவர்கள் சேரும்போது எதிர்பாராவிதமாக தாரிக் இறக்கிறார். அவரது நண்பருடன் சேர்ந்து அர்ஜுன் கல்லூரியை தொடங்குகிறான்.
மாணவர்கள் அவர்களுக்கு பிடித்ததை படிக்கலாம் என்பதே கல்லூரியின் முக்கிய குறிக்கோள்.
பொறமை கொண்ட(?) எஞ்சினியரிங் கல்லூரி நிறுவனர் நாக் கமிட்டியிடம் முறையிடுகிறார்.
அர்ஜுன்,   உயர்கல்வி குறித்த கேள்விகளை எழுப்பி வாதாடுகிறான்.
ஆசிரியர்கள், பாடத்திட்டம் - இல்லை என்பதால் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க நாக் குழு மறுக்கிறது.



ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இஷ்டம்போல திரிகிறார்கள்.
அபத்தக்கூத்தான காட்சிகளைக்கொண்ட படம்.
என்றாலும் உயர்கல்வி, பிள்ளைகள் மீது பெற்றோரின் அழுத்தம் குறித்து சில கேள்விகளை எழுப்புகிறது.

Paathshaala.

பள்ளியைப்பற்றி பேசும் படம். பாரம்பரியமான பள்ளி. வருமானம் ஈட்டவேண்டும் என நிர்வாகம் நினைக்கிறது. கல்விக்கட்டணம்,உணவக விலைகள் உயர்த்தப்படுகின்றன. பள்ளி மீடியாவில் புகழ் பெற்றால் அதிக கட்டணம் வாங்கலாம், நிறைய மாணவர்கள் சேருவார்கள் என்று நிர்வாகம் முயல்கிறது.
தனியார் தொலைக்காட்சி மூலம் சமையல்,பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கட்டாயப்படுத்தி மாணவர்களை ஈடுபடுத்துகிறார்கள். மாணவர்கள் படும் துயரத்தை கண்ட ஆசிரியர்கள்  வருந்துகிறார்கள்.
ஆங்கில ஆசிரியரின் முயற்சியால் போராட்டம் வெடிக்கிறது.
அனைத்து சேனல்களும் போராட்டம் பற்றிப்பேசுகின்றன.
பள்ளி காப்பாற்றப்படுகிறது.
உதிரியான காட்சிகள், மெதுவாக நகரும் படம். எனினும் தலைமையாசிரியராக வரும் நானா படேகர் பேசும் இறுதி வசனங்கள் மிக முக்கியமானவை.
'பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தேவை.
அவற்றை அதிகரிக்கவும் செய்யலாம்.
ஆனால்,பள்ளி என்பது 5 நட்சத்திர விடுதி அல்ல. பல பள்ளிகளில் அது போல வசதிகள் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள்.'

கல்வி குறித்த இந்தியப்படங்கள் சில என்னிடம் உண்டு.
 நம்மவர்- கல்லூரி மாணவர் , பேராசிரியரைப்பற்றிய கதை. கமல் படம்.
சாட்டை - உலகப்படங்களைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை.
குறைகள் இருந்தாலும் முயற்சிகள் தொடங்குவதை பாராட்ட வேண்டும்.
நான் பார்த்தவற்றுள் மிகச்சிறந்த படம் என்றால் மலையாளத்தில் வெளிவந்த 'மாணிக்கக்கல்லு'.
. கல்வி அமைச்சரின் ஊரில், அவர் படித்த பள்ளி.
1௦ ஆம் வகுப்பு அரசுத்தேர்வில் அனைவரும் தவறியதால் கல்வி அமைச்சர் கோபப்படுகிறார்.
புதிய ஆசிரியர் வருகிறார். கடும் முயற்சி. எதிர்க்கும் சக ஆசிரியர்கள்.
பொது மக்களின் உதவியை பெறுகிறார்.
மாணவர்களின் அன்பை பெறுகிறார்.மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.
பலமுறை ரசித்து, பார்த்த படம்.
 ஆசிரியர்களுக்கொரு பாடம்.

Hoosiers

நேற்று காலை விளையாட்டு சார்ந்த படமொன்று பார்த்தேன்.
விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டில் ஆர்வமிக்க மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் Coach Carter. பாடமாகவே வைக்கவேண்டிய படம். பலமுறை பார்த்த படம் என்பதால் புதிதாக 'Hoosiers' பார்த்தேன். இதுவும் கூடைப்பந்து பற்றிய படம். உண்மை நிகழ்வு சார்ந்து எடுக்கப்பட்ட படம்.
அமெரிக்காவின் இன்டியானா பகுதியில் உள்ள கிராமப்பள்ளிக்கூடம்.
ஆசிரியராகவும் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் வருகிறார் நார்மன் டேல்.
முன்னாள் நண்பரான பள்ளி முதல்வரின் வேண்டுகோளின் படி வேலைக்கு வரும் அவரை ஊரில் சிலர் விரும்பவில்லை. 

அவரின் பயிற்சிமுறைகள் புதுமையாக இருக்கின்றன.
குடிகாரராக இருக்கும் அந்த  ஊர்க்காரர் ஒருவரின்  துணையுடன் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச்செல்கிறார்.
தொடர்ந்த முயற்சி, கடினமான பயிற்சி மூலம் அந்த கிராமப்பள்ளி அணி மாநிலப்போட்டிகளில் வெற்றிபெறுகிறது.
விளையாட்டு ஆசிரியரின் பயிற்சிமுறைகள், மாணவர்களுடன் பழகும் முறை, கூடைப்பந்து போட்டிகள் என ரசித்து பார்க்கவேண்டிய படம்.


Etre et Avoir

தொடர்ந்த விடுமுறை.
நாளை பையனுக்கு IIT-JEE நுழைவுத்தேர்வு.
நேற்றும் இன்றும் இரு படங்கள்.
அதிலொன்று Etre et Avoir.
ஃபிரான்ஸ் நாட்டின் கிராமப்பள்ளிக்கூடம் ஒன்றைப்பற்றிய ஆவணப்படம். ஆங்கிலத்தில் To be and to Have.
2002 இல் வெளியானது.

ஃபிரான்ஸ் நாட்டில் ஒரு கிராமம்.
கடும் பனிப்பொழிவு.
மாடு மேய்ப்பவர்கள்.
வகுப்பறைக்குள் ஆமைகள் ஊர்கின்றன.
பள்ளி வாகனத்தில் குழந்தைகள் வருகிறார்கள்.
6 முதல் 11 வயது வரையான குழந்தைகள்.
சிறு குழந்தைகளுக்கு ஆர்வமுடன் கற்பிக்கும் ஆசிரியர்.
குழந்தைகளின் சேட்டைகள், விளையாட்டு, கற்றல் ஆகியவற்றை அருகே இருந்து பார்ப்பது போன்ற அற்புத அனுபவம்.
அன்பும் கண்டிப்பும் கலந்த ஆசிரியர்.
வீட்டுப்பாடத்திற்கு உதவும் பெற்றோர்.
பல்வேறு காலநிலைகள்.
ஓராண்டு நிகழ்வுகள், கவிதையாய்.
இறுதி நாள்,
குழந்தைகள் முத்தமிட்டு விடைபெற,
கலங்கி நிற்கும் ஆசிரியர்.
படம் நிறைகிறது. நம் மனமும்.

கற்பிக்க, கசடற!






   Youtube இல் School of life என்ற படம் பார்த்தேன்.
பால்புரூக் நடுநிலைப்பள்ளியில் கடைசி வேலைநாள்.ஆசிரியர்,மாணவர் கூட்டம்.மாணவர் அனுபவப் பகிர்விற்குப்பின் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.பலத்த ஆரவாரங்களுக்கிடையே நார்மன் வார்னர் பரிசைப் பெறுகிறார். கடந்த 43 ஆண்டுகளும் அவரே தொடர்ந்து சிறந்த ஆசிரியர் பரிசைப் பெற்றுவருகிறார்.அவர் மகன் மேட் ,அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.தந்தையின் நிழலில் வளரும் அவருக்கும் சிறந்த ஆசிரியர் பரிசுபெற்ற ஆவலாக இருக்கிறது.பரிசு பெற்ற மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையிலேயே நார்மன் வார்னர் உயிர் பிரிகிறது.
இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது பெரும் ஆவலுடன் புதிய கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்கிறார் மேட் .ஆசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் முதல்வர்.வார்னரின் பாடமான சமூக அறிவியலுக்கு புதிய ஆசிரியராக மைக்கேல் டி ஆஞ்சலோ பொறுப்பேற்கிறார்.மைக்கேல் அதே பள்ளியில் பயின்ற மாணவர்.
மைக்கேலின் அறிமுக உரையே மாணவரிடம் ஆரவாரத்தையும் மிஸ்டர்- டி என்ற செல்லப் பெயரையும் பெற்றுத்தருகிறது.
மேட்டின் அறிவியல் வகுப்பு தொடங்குகிறது.குதர்க்கமாகக் கேள்வி கேட்கும் மாணவர் வெளியேற்றப்படுகிறார்.வகுப்பறை ஒழுங்குடன்(?) பாடம் நடைபெறுகிறது.
மைக்கேல், மாணவர் இருக்கைகளை வட்டமாக மாற்றியமைக்கிறார்.அன்பாகப் பேசுகிறார்.அமெரிக்க சுதந்திரப் போர் நாடகமாகவே மைதானத்தில் நடத்தப்படுகிறது.பள்ளி முழுவதும் அனைவர் வாயிலும் மிஸ்டர்-டி .
மிஸ்டர் -டி , புகழடைவது மேட்டிற்கு எரிச்சலைத் தருகிறது.இரவு நேரங்களில் அப்பா பெற்ற விருதைப் பார்த்தபடி இருக்கிறார்.
இரவில் மிஸ்டர்-டி யின் வகுப்பறையுள் தேடுவது,மாணவர்களிடம் நெருங்க முயல்வது என மேட்டின் செயல்கள் அனைத்தும் நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன.
இரு நாட்கள் மிஸ்டர்-டி யைப் பின்தொடர்ந்து ,அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் மேட் .டி-யின் மீது இறக்கம் வருகிறது.தனது தந்தையின் வழியையே மிஸ்டர்-டி பின்பற்றுவதை அறிகிறார்.
மறுநாள் தனது மாணவர்களுடன் டி -யின் வகுப்பறைக்குச் சென்று அவரது செயல்முறைகளை அறிகிறார்.
மிஸ்டர் -டி  யின் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.புதிய சமூக அறிவியல் ஆசிரியை மீண்டும் வகுப்பறையை பாரம்பரிய(?) முறைக்கு மாற்றுகிறார்.
மேட்டின் வகுப்பறை செயல்பாடுகளின் களமாகிறது .இரண்டாண்டுகள் கழித்து வகுப்பறை காட்டப்படுகிறது.புகைப்படத்தில் மிஸ்டர்-டி யுடன் மேட்  மற்றும் மாணவர்கள்.அதன் கீழ் மிஸ்டர்-டி  யின் பிறந்த,இறந்த ஆண்டுகள்.அருகில் மேட்  கடந்த இரு ஆண்டுகளாகப் பெற்ற சிறந்த ஆசிரியர் விருதுகள்.
நல்லாசிரியர் விருது பெற ஆசைப்படுவது,மாதிரிகளை வைத்துப் பாடம் நடத்த முயல்வது,மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க முயல்வது,மிஸ்டர் டி மீதான பொறாமை,அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள்,மிஸ்டர்-டி  யின் வழிமுறைகளைக் கற்க முயல்வது என நகைச்சுவையுடன் நடிப்பிலும் முதலிடம் பிடிக்கிறார் மேட்டாக வரும் டேவிட் பெமர்.
மிஸ்டர் -டி ஆக வரும் ரைன் ரெனல்ட்ஸ் எளிமையான நடிப்பால் எளிதில் கவருகிறார்.

பாடம் பார்த்து முடித்தவுடன் மனது கனமாகவும் இலகுவாகவும் இருந்தது. அந்த இருவரில் நான் யார்?
கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  என் வகுப்பில் இருக்கை முறைகளை மாற்றிவிட்டேன்.ஆனாலும் மாணவர்களுக்கும் எனக்கும் சிறிது இடைவெளி இருப்பதாகவே படுகிறது.வெறுமனே பாடம் நடத்துவதை விடுத்து பல்வேறு செயல்முறைகளில் ஈடுபட்டாலும் ஏதோ குறைகிறது.

எனது பாடமான தமிழில் அனைத்து மாணவரும் எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் திறமை பெறவேண்டும்.
வகுப்பறைச் சிறையிலிருந்து மாணவரை விடுவித்துக் கற்றலை இனிமையாக்கவேண்டும்.செயல்திட்டங்களை வகுத்து,செயல்படுத்திய பின் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் கற்க வேண்டியவர்கள்-ஆசிரியர்களும்,மாணவர்களும்.

சூப்பர் மேன் வருவாரா?


அமெரிக்கக் கல்வி பற்றிய ஆவணப் படமான Waiting for Superman பார்த்தேன்.2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்கக் கல்விமுறையின் சீரழிவுகளையும் எதிர்காலத்தேவைகளையும் அலசும் ஆகச்சிறந்த படம்.

"சூப்பர் மேன் -உண்மையில்லை என்று அம்மா சொன்ன நாளில்தான் நிறைய அழுதேன்.கிறிஸ்மஸ் தாத்தா வரமாட்டார் என்பதைவிட சூப்பர்  மேன் வரமாட்டார் என்பதுதான் என்னை அதிகம் பாதித்தது.ஏனெனில் சூப்பர் மேன், கெட்டவங்களை அழித்து நல்லவங்களை காப்பாற்றுவார்." என்று ஒரு ஆசிரியர் கூறுவதுடன் படம் தொடங்குகிறது.

ஒவ்வொருநாளும் அதே சடங்குகள்.....காலை உணவு,புத்தகப் பை, பள்ளிக்குச் செல்லுதல்.எதற்காக?

சில குழந்தைகளிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் ? என்ற கேள்வி கேட்கப்படும்போது ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையைக் கூறுகின்றனர்.குழந்தைகள் தம் எதிர்காலம் குறித்த கனவுகளை, நண்பர்கள்,பெற்றோர்,மற்றும் ஆசிரியரிடமிருந்து பெறுகிறார்கள்.

4 ஆம் வகுப்பில் முதலிடம் பெறும்  மாணவர்கள் 5,6,7,8 என மேலே செல்லச்செல்ல பின்னடைகிறார்கள்.குறை யாரிடம் உள்ளது?
மாணவர்? ஆசிரியர்? கல்வித்திட்டம்?
 எனப் பல கேள்விகளுடன் தொடங்கும் படம் அமெரிக்கக் கல்விமுறை மற்றும் ஆசிரியர்களின் நிறை குறைகளை அலசுகிறது.

அமெரிக்காவில் அருகமைப் பள்ளிகளில்தான் குழந்தைகள் கல்வி பயில வேண்டும்.கிராமம் மற்றும் நகரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிகள் தரத்தில் குறைந்ததாக உள்ளன.பல பள்ளிகள் 'இடைநிற்றல் தொழிற்சாலை'களாக ( dropout factories) இயங்குகின்றன.எட்டாம் வகுப்புவரை தள்ளப்பட்டு வருபவர்கள் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பை பெரும்பாலும் கைவிடுகின்றனர்.

40 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் இதுவரை பயின்றவர்கள் 60,000 பேர்.அதில் கல்லூரிக்கல்வி முடிக்காதவர்கள் 40,000 பேர்.

அரசுப்பள்ளிகளில் குறைந்த இடங்கள்,ஆசிரியர்களின் ஆர்வக்குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலான பள்ளிகள் தரம் குறைந்ததாக உள்ளன.ஒரு சில பள்ளிகளே தரமானதாக உள்ளன.

இங்கே நான் சில செய்திகளைச்  சொல்ல வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
 "அமெரிக்க பள்ளிகளும் இந்தியா போலத்தான்" என்றுதானே? அதுதான் இல்லை.மேலே சொல்லப்பட்ட செய்திகள் அமெரிக்க கல்விமுறையின் அவலத்தைக் காட்டினாலும் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நம் நாட்டின் ஆகச்சிறந்த பள்ளிகளைப்போல் உள்ளது. விசாலமான வகுப்பறைகள்,சிறந்த கட்டிடங்கள்,உபகரணங்கள்,
வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வசதிகளில் எந்தக்குறையும் இல்லை.

இப்போது ஆவணப்படத்தைத் தொடருவோம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கல்வியைத் தொடர இயலாதவர்களே அதிகம் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவரவர் குற்றங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒருவர் குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைவாசம் பெறுகிறார் எனக்கொண்டால் ,
குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெரும் 1   சிறைவாசிக்கு ஆகும் செலவு
33,000 X 4= 1,32,000 டாலர்கள்.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக் கல்வி வரை ( 13 ஆண்டுகள்) ஆகும் செலவு
8,300 X 13 = 1,07,900 டாலர்கள்.
கல்வியைவிட சிறை பலமடங்கு மக்களின் பணத்தைச் செலவாக்குகிறது.
எனவே கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெரும் உயர் பணிகளுக்கு 12 கோடியே 10 இலட்சம் பேர் தேவை.ஆனால்,5 கோடி அமெரிக்கர்கள் மட்டுமே இதற்குத் தகுதியுடன் இருப்பார்கள்.மீதிப் பணியிடங்களை வெளிநாட்டினர் பெறுவார்கள்.இது அமெரிக்காவைப் பெரிதும் பாதிக்குமென பில் கேட்ஸ் கூறுகிறார்.

தற்காலக் குழந்தைகள் கற்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையல்ல.பல புதிய செயல்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களின்  கூற்றுப்படி,
 'சரியான வழிமுறைகள் கல்வியின் தரத்தை அதிகரிக்கும்'.

சுருக்கமாகக் கூறினால்,
தரமான ஆசிரியர்கள்
அதிகக் கற்றல் நேரம்
உலகத்தரமான கல்வி
உயர்ந்த எதிர்பார்ப்பு ,செயல்முறைகள்
பொறுப்பு உணர்ந்து செயல்படுதல்

ஆகியவை கல்வித்தரத்தை உயர்த்துவதாக கண்டறியப் பெற்றுள்ளன.எனவே சூப்பர் மேனைப் போன்ற ஆசிரியர்கள்தாம் இப்போதைய தேவை.என ஆவணப்படம் நிறைகிறது.

இந்த ஆவணப்படம் என்னுள் பல எண்ணங்களை எழுப்பியது.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாத பள்ளிகள்,தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இலவசங்களில் இயங்கும் அரசுகள்,பிள்ளைகளை ஏதும் செய்ய இயலாத பெற்றோர்,பணி பெறும்வரை போராடி அதன் பின் ஓய்வு வரை ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்,மாற்றிமாற்றிக் குறை கூறியே கழியும் கல்வித் திட்டங்கள் இன்னும் பலப் பல தடைகளைத் தாண்டியும் சிறந்த சில  மாணவர்கள் -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமான சூப்பர் மேன்களைக் கண்டறிந்து அவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து தாமாகவே தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.கேட்பாரில்லாத இன்றைய சூ ழல், ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் மனப்புலம்பலின் இறுதியில் பெருவெடிப்பாக மாறக்கூடும்.
ஆசிரியர்,பெற்றோர் கலந்துரையாடி புதிய செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பு வெறுப்பு இன்றி விவாதம் செய்வோமா?

இறந்த கவிஞர் குழு


பள்ளிப் பருவம் வாழ்வின் நாற்றாங்கால்.
  ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்கும் வேலைகளை அடையவே கல்வி என்று இன்றைய மாணவர்கள் பல வழிகளில் பெற்றோரால் அறிவுறுத்தப் படுகின்றனர்.டாக்டர்,பொறியாளர்,
கணிப்பொறி வல்லுநர் எனப் பெற்றோரின் ஆசை விளக்கில் தோன்றும் பூதங்களாகவே பிள்ளைகள் நடத்தப்படுகின்றனர்.பணமே வாழ்க்கை என அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அறிவு வளர்ச்சி,மானுடப் பண்புகள் போன்றவை எழுத்தில் கூட இல்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடங்களும் மாணவர்களை மனிதர்களாக நடத்தாமல் மதிப்பெண்களால் அளவிடுகின்றன. கல்விக்கூடங்களில் மானுடத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.
 அதிக அளவு மதிப்பெண் பெறும்  மாணவர்களை உருவாக்கும் பள்ளியே சிறந்த பள்ளியாகப் போற்றப்படுகிறது.
தம் பிள்ளைகள் மதிப்பெண்களைக் குவிக்க என்ன விலை வேண்டுமானாலும் தரப் பெற்றோர்கள் தயாராக உள்ளனர். அதிக லாபம் தரும் வியாபாரமாகவே பெரும்பாலான கல்விநிலையங்கள் நடத்தப்படுகின்றன.

புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்தே தீரவேண்டுமென ஆசிரியர்கள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை வாசித்து விடும் இயந்திரமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாருமே கவலைப்படுவதில்லை.
அடக்குமுறை பள்ளிகளின் கல்விமுறை பற்றிய உலகப் படங்களில் முதன்மையானதாகக் கொண்டாடப் படுவது Dead Poets Society.

Tom Schulman தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதையை Peter Weir இயக்கியுள்ளார்.1989 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் Robin Williams ஆசிரியராக நடித்துள்ளார்.

 அமெரிக்காவின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான வெல்டன் அகாடமியின் கல்வியாண்டுத்தொடக்கம்.
17 வயது வரையான மாணவர்கள் பயிலும் பள்ளி அது.

அறிவிற்கான ஒளி என்று பள்ளி முதல்வர் நீட்டும் மெழுகுவர்த்தியிலிருந்து மாணவர்கள் தங்களுடைய மெழுவர்த்தியை ஒளிஏற்றிக் கொள்கின்றனர்.
பள்ளியின் பழம் பெருமை,கண்டிப்பு,சட்ட திட்டங்கள்,நடைமுறைகள் குறித்து முதல்வர் உரையாற்றுகிறார்.
புதிய ஆங்கில ஆசிரியராக நமது பள்ளியின் முந்நாள் மாணவரான
ஜான் கீட்டிங் பணியாற்றுவார் என அறிமுகம் செய்து வைக்கிறார்.
கூட்ட முடிவில் பெற்றோர்கள் தம்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு பிள்ளைகளை   விட்டுச்செல்கின்றனர்.

மாணவர் விடுதியில் நீல் பெர்ரியும் டோட் ஆண்டர்சனும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.நீல் துடிப்பானவன்.டாக்டர் ஆகவேண்டும் என அப்பாவால் கண்டிப்புடன் வளர்க்கப்படுபவன்.டோட்,கூச்ச சுபாவம் உள்ளவன். அவனது அண்ணனைப் போல உயர் பதவி பெறவேண்டுமென அதே பள்ளியில் சேர்க்கப்பட்டவன்.
நீல்  அறையில் மற்ற நண்பர்களும் கூடுகின்றனர்.முதல்வரின் உரையைக் கிண்டல் செய்கின்றனர்.பள்ளியின் பெயரை Hell-ton எனக் கேலி செய்துமகிழ்கின்றனர்.

மறுநாள் பள்ளி தொடங்குகிறது.
ஆங்கில வகுப்பு.கீட்டிங் விசிலடித்தபடி வகுப்பினுள் நுழைந்து மானவர்களைக்கடந்து வெளியேறுகிறார்.
அனைவரும் ஆச்சரியமாக பார்த்தபடி இருக்க,வகுப்பினுள் எட்டிப்பார்த்து அனைவரையும் வெளியே அழைக்கிறார்.
 வரவேற்பறை. அனைவரையும் நிற்கவைத்து,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். நீங்கள் என்னை மிஸ்டர் கீட்டிங் அல்லது
 'ஓ கேப்டன் மை கேப்டன்' என அழைக்கலாம் என்கிறார்.
அந்த வரியிலிருந்து கவிதை வகுப்பு தொடங்குகிறது.

இந்த நாளைக் கைப்பற்றுங்கள். இந்தப் பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் பயின்றுள்ளனர்.அனைவருக்கும் ஒரே கனவுதான். இந்த நாளைக் கைப்பற்றுங்கள்.

கீட்டிங்கின் முதல் வகுப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கோமாளித்தனம் என்றும் வித்தியாசமானது என்றும் பலவாறு அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.

மறுநாள் புத்தகத்தில் உள்ள 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார் கீட்டிங். கவிதையைக் அறிவியல்பூர்வமாக பலவிதமாக அளவிடுகிறது பாடம். முடிவில் கவிதையை அறிவியல்பூர்வமாக எப்படி அளவிட முடியும்? கவிதை என்பது உணர்வுப்பூர்வமானது.எனவே,தவறான பாடத்தை அனைவரும் கிழித்து விடுங்கள் என்கிறார்.மாணவர்கள் மகிழ்ச்சியாக புத்தகத்தைக் கிழிக்கின்றனர்.

' ஏன் நாம் கவிதையை எழுதவும்,படிக்கவும் வேண்டும்?
ஏனெனில்,நாம் மனிதர்கள். மருத்துவம்,சட்டம், பொறியியல்,போன்றவை வாழ்வதற்கான   பணத்தைத் தருபவை.
கவிதை, அன்பு, காதல் போன்றவை நம்மை உயிர்ப்புடன் வைப்பவை.'
என்று அரிய வகுப்பு நிறைவடைகிறது. மாணவர்கள் கீட்டிங்கை விரும்பத்தொடங்குகின்றனர்.

நீல், பழைய பள்ளி மலரிலிருந்து கஈட்டிங்கைப் பற்றிய குறிப்புகளை அறிகிறான்.'இறந்த  கவிஞர் குழு' அமைத்தவர் என்பதைப் பற்றி அறியும் ஆவலுடன் நண்பர்கள் அனிவரும் ஆசிரியரிடம் கேட்கின்றனர்,
"பள்ளிக்கு அருகிலுள்ள ஏரிக்கு அப்பாலுள்ள குகையில் யாருக்கும் தெரியாமல் இரவுகளில் நண்பர்களுடன் சென்று கவிதைகள் வாசிப்போம். இது பள்ளி விதிகளுக்கு முரணானது.இருந்தாலும் கவிதைமேல் கொண்ட காதலால் அப்படிச் செய்தோம். இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்." என்று கீட்டிங் கூறுகிறார்.

நீல், தனது நண்பர்களுடன் அன்றைய இரவே குகைக்குச் சென்று கவிதை வாசித்துத் திரும்புகிறான்.அவ்வப்போது இது தொடர்கிறது.

மைதானத்தில் கால் பந்து உதைத்தபடி கவிதை சொல்வது, ஓசையுடன் நடந்து கொண்டே கவிதை சொல்வது, வகுப்பறையில் மேசைமேல் ஏறி  நின்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது என கீட்டிங்கின் புதிய அணுகுமுறைகள் மாணவரிடையே ஆர்வத்தையும் மற்றவரிடையே பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.

மிட் சம்மர் நைட் டிரீம் என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு நீலுக்கு கிடைக்கிறது.அப்பாவிடம் கேட்டால் அனுமதி கிடைக்காது என்று,அவரின் கையெழுத்தை தானே போட்டு அனுமதிக்கடிதம் கொடுத்து நாடக ஒத்திகையில் ஈடுபடுகிறான். நாடகத்தில் மகன் நடிப்பதை எதிர்பாராத விதமாக அறிந்த தந்தை பள்ளிக்கு வந்து நீலைக் கண்டிக்கிறார்.மருத்துவர் ஆவதே அவனது குறிக்கோளாக இருக்கவேண்டும்.நாடகத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகிறார். நீல் வழக்கம் போலத் தந்தையின் சொல்படிக் கேட்பதாகக் கூறுகிறான்.
ஆனாலும் மனம் பொறுக்காமல் இரவில் கீட்டிங்கின் அறைக்குச் சென்று அவரது கருத்தைக் கேட்கிறான்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவது மகனின் கடமை. உனது ஆசைகளையும் அவரிடம் அன்பாக எடுத்துக் கூறி நடிக்க அனுமதி பெறுமாறு ஆசிரியர் கூறுகிறார்.
அப்பாவிடம் பேசினாலும் அனுமதிகிடைக்காது என முடிவுசெய்து,அவருக்குத் தெரியாமல் நாடகத்தில் நடிக்கிறான் நீல். நாடக முடிவில் அனைவரும் அவன் நடிப்பைப் பாராட்டுகின்றனர்.அவன் அப்பாவும் அரங்கிற்கு வந்திருக்கிறார்.கோபமுடன் நீலைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனது வார்த்திகளை அவன் மீறிவிட்டதாகவும் அவனை ராணுவப் பள்ளியொன்றில் சேர்க்கவிருப்பதாகவும் கூறுகிறார்.மனம் உடைந்த நீல்,இரவில் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
நீலின் பெற்றோரின் வேண்டுகோளின்படி வெல்டன் பள்ளி முதல்வர் நோலன், நீலின் நண்பர்களையும் பெற்றோரையும்  அழைத்து மிரட்டி நீலின் தற்கொலைக்குக் காரணம் கீட்டிங்கின் தவறான போதனா முறைகள்தான் என எழுதி வாங்குகிறார்.டோட், மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தலின் பேரில் கையொப்பமிடுகிறான். கீட்டிங் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்.

மறுநாள் ஆங்கில வகுப்பு.பள்ளி முதல்வர் நோலன்,மாணவர்களின் புத்தகத்தை எடுத்து 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார். கீட்டிங்கின் சொற்படி அந்தப்பாடத்தைக் கிழித்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

" அது மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை.இவ்வளவு நாள் நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறீர்கள்.இனி நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்." என்று தனது புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார் நோலன்.
அப்போது தனது உடைமைகளை எடுக்கவேண்டி அங்கு வருகிறார் கீட்டிங். அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் அனைவரும் தலை குனிய, பிறரின் வற்புறுத்தலின் பேரிலேயே தானும் கைஎழுத்திட்டதாக கதறுகிறான் டோட்.நோலன் அவனைக் கண்டித்து, விரைவில் வெளியேறுமாறு கீட்டிங்கிடம்  கூறுகிறார். முதல்வரின் சொல்லையும் மீறி தனது மேசைமேல் ஏறி நின்று  'ஓ கேப்டன் மை கேப்டன்' என்று கண்ணீருடன் அழைக்கிறான் டோட் . முதல்வர் கடுமையாகக் கண்டித்துச் சத்தமிட மற்ற சில மாணவர்களும் அதையே செய்கின்றனர்.அமைதியாக வெளியேறுகிறார் கீட்டிங்.

மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கத்தயாராகவும் இருக்கவேண்டும். எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தம் பணியைத் தொடருவார்கள். அவர்களிடமே மானுடத்தின் எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.

பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது.